பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதன் அலுவல் நிலைப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகிற அலுவலர்களின் பிரச்னைகளை களைவதற்கும், குறைகளை எடுத்துச் சொல்வதற்கும் அந்தந்த பல்கலைக்கழகங்களில் உள்ள ஆட்சி மன்றக் குழுவிலும், ஆளுமை மன்றத்திலும் பணியாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்.
நிதிச் சுமையில் சிக்கியுள்ள பல்கலைக்கழகங்களின் பல்வேறு வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு 1996 வரை உள்ள ஊழியர்களின் அடிப்படையில் அளிக்கப்படுகிற நிதியுதவியை 2017 வரையுள்ள கூடுதல் ஊழியர்களை அங்கீகரித்து, அதற்கு ஏற்ப நிதியுதவியை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் செங்கல்பட்டு உறுப்புக் கல்லூரியை ஏற்று நடத்துவதுபோல, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு பிற பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளையும் ஏற்று நடத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்கவும், ஊழியர்களுக்குத் தாமதமின்றி ஊதியம் வழங்கிடவும் சிறப்பு நிதி
வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
சங்கத் தலைவர் மு. ஆறுமுகம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலர் கே. ராஜேந்திரன், செயலர் கி. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நா. இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.