தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப். 2, 30-ஆம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து புகட்டுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏப். 2-ஆம் தேதியும், 30-ஆம் தேதியும் புகட்டப்படவுள்ளது. இதில், மாவட்டத்தில் 2,50,240 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இதற்காக நகரப் பகுதிகளில் 128 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,382 மையங்களும் என மொத்தம் 1,510 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.
இப்பணிக்கு 6,040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார்வையாளர்களும், 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோவில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும், 51 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். வேலைநிமித்தம் காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தாற்காலிக இம்மாவட்டத்தில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஏ. சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.