தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகள், செல்லிடப்பேசிகளை திருடிச் செல்கின்றனர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியுள்ள வாகனங்களில் பெட்ரோல் திருடுவது, கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் செல்வது, வீடுகளில் ஆடுகள் திருடுவது என அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்களால் வர்த்தகர்கள், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவிலுள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து, அங்கிருந்த விலை உயர்ந்த செல்லிடப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து உள்ளூர் சமூக ஆர்வலர் ஹாஜா முகைதீன் கூறியது:
அதிரையில் கடந்த பிப். 22-ஆம் தேதி நள்ளிரவில் மாரியம்மாள் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் உறங்கிக் கொண்டிருந்த மாரியம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடமிருந்து பீரோ சாவியை பிடுங்கி அதிலிருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஷோரூம் ஷட்டரை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பைக்கை திருடிச் சென்றனர்.
எனவே, அதிராம்பட்டினத்தில் நடக்கும் தொடர் திருட்டை தடுக்க காவல்துறையினர் இரவு ரோந்தில் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். இரவு நேரங்களில் நடமாடும் அறிமுகமில்லாத நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். தப்பிச் செல்லும் திருடர்களை பிடிக்க ஊர் எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும். மேலும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் குடியிருப்புதாரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தர வேண்டும் என்றார்.