தஞ்சாவூரில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நிறைவடைந்ததையொட்டி, அணிவகுப்பு ஊர்வலம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே ஆர்.எஸ்.எஸ். மாநில அளவிலான பயிற்சி முகாம் ஏப். 28ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 20 நாள்கள் நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் சுமார் 140 பேர் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முகாம் நிறைவடைந்ததையொட்டி, தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
கீழ ராஜவீதியில் உள்ள அரண்மனை முகப்பில் காவி கொடி ஏற்றப்பட்டு, ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளர் செந்தில்குமார், கேரளம், தமிழ்நாடு மாநிலங்களின் செயலர் ஸ்தானுமாலயன், மாநிலச் செயலர் ஆடலரசன், மண்டலத் தலைவர் அப்பாசாமி, மாவட்டத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தை தர்ம ரக்ஷன சமிதி மாவட்டத் தலைவர் சிவ. அமிர்தலிங்கம் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதி, சிவகங்கை பூங்கா, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலை வழியாக பனகல் கட்டடம் முன் ஊர்வலம் முடிவடைந்தது. இதில், பயிற்சி பெற்ற ஏறத்தாழ 140 தொண்டர்கள் கலந்து கொண்டனர்.