தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 95.21% தேர்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 95.21 சத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 95.21 சத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் 399 பள்ளிகளைச் சேர்ந்த 33,844 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 32,224 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.21 சதம். இது, கடந்த ஆண்டை விட 0.18 சதம் குறைவு. என்றாலும், மாநில அளவில் தேர்ச்சி அடிப்படையிலான தர வரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 15-ம் இடத்தில் இருந்த தஞ்சாவூர் மாவட்டம் நிகழாண்டு 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கல்வி மாவட்ட அளவில் பட்டுக்கோட்டையில் 96.81 சதம் பேரும், கும்பகோணத்தில் 93.45 சதம் பேரும், தஞ்சாவூரில் 95.65 சதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,391 மாணவர்களில் 93.29 சதம் பேரும், 16,453 மாணவிகளில் 93.29 சதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல நிகழாண்டும் மாணவர்களைவிட, மாணவிகளே 3.74 சதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 89.49 சதம் பேரும், 5 மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் 95.27 சதம் பேரும், 34 முழு உதவி பெறும் பள்ளிகளில் 93.12 சதம் பேரும், 204 அரசுப் பள்ளிகளில் 93.71 சதம் பேரும், 29 பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 97.87 சதம் பேரும், 92 சுய நிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.46 சதம் பேரும், 98 சுயநிதி மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகளில் 98.34 சதம் பேரும், 3 சமூக நலப் பள்ளிகளில் 93.18 சதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல நிகழாண்டு அரசுப் பள்ளிகளைவிட, சுய நிதிப் பள்ளிகளே தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளன.

சமூக அறிவியலில் 1,083 பேர் நூற்றுக்கு நூறு
தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 1,083 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 32,224 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,083 பேர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதேபோல, அறிவியலில் 435 பேரும், கணிதத்தில் 418 பேரும், தமிழில் 4 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். ஆங்கிலத்தில் நூற்றுக்கு நூறு யாரும் பெறவில்லை.

151 பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 399 பள்ளிகளில் 151 பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 67. தவிர, 13 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 4 முழு உதவி பெறும் பள்ளிகள், தலா ஒரு மாநகராட்சி, நகராட்சிப் பள்ளி, 65 சுயநிதிப் பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி பெற்றன.

பட்டுக்கோட்டையில் அதிகம்
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அதிக அளவாக 80 பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இதிலும், 52 அரசுப் பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி அடைந்துள்ளது. தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 37 பள்ளிகளும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகளும் நூறு சதத் தேர்ச்சி பெற்றன.

பார்வையற்றோர் பள்ளி சாதனை
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் உள்ள அரசுப் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 26 மாணவ, மாணவிகளும் தேர்ச்சியடைந்து நூறு சத தேர்ச்சி என்ற சாதனையைப் படைத்தனர். இப்பள்ளி தொடர்ந்து நூறு சதத் தேர்ச்சி பெற்று வருகிறது. இதேபோல, அருகில் உள்ள அரசு காதுகேளாதோர், வாய் பேச இயலாதோர் பள்ளியில் தேர்வு எழுதிய 12 பேரில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர்.

70 சதத்துக்கும் குறைவான தேர்ச்சி
மாவட்டத்தில் 70 சதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை 4 பள்ளிகள் பெற்றுள்ளன. இதில், தஞ்சாவூர் அருகேயுள்ள வ. வல்லுண்டாம்பட்டு அரசு உயர் நிலைப் பள்ளி, நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அரசு சேவை இல்ல உயர் நிலைப் பள்ளி தலா 66.67 சதமும், கும்பகோணம் அருகேயுள்ள கோணுலாம்பள்ளம் அரசு உயர் நிலைப் பள்ளி 64.62 சதமும், கொடியாலம் அரசு உயர் நிலைப் பள்ளி 59.52 சதம் பேரும் தேர்ச்சி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com