கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் சாலையோரம் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்த 50-க்கும் மேற்பட்ட பழ வண்டிகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர்.
இப் பேருந்து நிலைய முன்புறம் 50-க்கும் மேற்பட்டோர் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் சாலையோர இடத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்து வந்தனராம்.
இந்நிலையில் கடந்த வாரம் இப் பேருந்து நிலையத்துக்குள் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இடையூறாக இருந்த இப்பழ வண்டிகளை அப்புறப்படுத்த நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நகராட்சி ஆணையர் கே. உமாமகேஸ்வரி அறிவுரைப்படி நகரமைப்பு ஆய்வாளர்கள், நகராட்சி பணியாளர்கள் பழவண்டிகளின் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றச் சென்றனர். இதையடுத்து தள்ளுவண்டி வியாபாரிகள் அங்கிருந்து தாங்களாகவே வேறிடங்களுக்கு சென்றுவிட்டனர். இந்த இடத்தில் பழ வண்டிகளில் வியாபாரம் செய்ய கூடாது, மீறினால் வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துச் சென்றனர் நகராட்சியினர்.