தில்லியில் நடைபெற உள்ள போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயிலடியில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி. நடராஜன் தலைமை வகித்தார்.
நாடு முழுவதும் விவசாயிகள் சந்திப்பு இயக்கம் நடத்தி இறுதியாக நவம்பர் 20-ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் பேரணியும், இதைத் தொடர்ந்து 3 நாள்களுக்கு விவசாயிகள் பாராளுமன்றமும் நடைபெறுகிறது.
இதற்கு ஆதரவளிக்கும் விதமாகவும், தேசிய வேளாண்மை கமிஷனின் பரிந்துரைப்படி, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான, கட்டுப்படியான விலை வழங்க வேண்டும்.
விவசாயிகளை கடன்களிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கண்ணன், கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ப. ராமசாமி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க கெளரவத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.