பாபநாசம் அருகே இலவசமாக வழங்கப்பட்ட பட்டா இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நரிக்குறவர்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலர் சி. ஜெயபால் தலைமையில் நரிக்குறவர்கள் அளித்த மனு:
பாபநாசம் அருகேயுள்ள பசுபதி கோயில் ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஊசி, பாசி, மணிமாலை உள்ளிட்ட பொருள்களை வியாபாரம் செய்து வருகிறோம். பசுபதிகோயிலில் 16 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் குறுகிய இடமாக இருக்கிறது. ஆக்கிரமித்தவர்களிடம் கேட்டால் மிரட்டுகின்றனர்.
மேலும், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, எங்களது இடத்தில் ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, தொகுப்பு வீடுகளைக் கட்டித் தர வேண்டும்.
மேலும், இவர்களுக்கு அரசு தரும் தொழில் தொடங்க வசதியாக வங்கிக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
காலிக் குடங்களுடன் வந்த கிராம மக்கள்
இதேபோல, ஒரத்தநாடு வட்டம், பொய்யுண்டார்கோட்டை அருகேயுள்ள பழங்கொண்டார்குடிகாடைச் சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்து அளித்த மனு: பழங்கொண்டார்குடிகாட்டில் 40 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு 4 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால், 2 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி அலுவலர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.