ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு வர்த்தக சங்கத்தின் சிறப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நல்லதம்பி, துணை செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 178 பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை குறைப்பு செய்து வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். அதேநேரத்தில், உணவுப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியை மேலும் குறைக்க வேண்டும். பாப்பாநாடு பகுதியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் - மன்னார்குடி வழியாக சென்னைக்கு இயக்கிய ரயிலை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை - தஞ்சாவூருக்கு ரயில்வே பாதை அமைக்க நிலம் அளவீடு செய்யப்பட்டு ரயில்வே பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் ரயில்வே பாதை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். நிறைவில், பொருளாளர் என்.எஸ்.பழனியப்பன் நன்றி கூறினார்.