கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிலை திருட்டு மற்றும் கடத்தல் வழக்கு விசாரணைக்காக சுபாஷ்சந்திரகபூரை போலீஸார் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகம், சித்தமல்லி வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2008ஆம் ஆண்டு 20 சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் தொடர்புடைய 2 பேர் இறந்துவிட்டனர். பிச்சுமணி என்பவர் அப்ரூவராக மாறிவிட்டார். சுபாஷ்சந்திரகபூர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுபாஷ்சந்திரகபூரை போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாரிச்சாமி, சஞ்சீவிஅசோகன், சிவக்குமார், கலியபெருமாள், ரெத்தினம், கந்தசாமி, அருணாசலம், ஸ்ரீராம், பார்த்திபன் ஆகிய 9 பேர் மற்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையை சேர்ந்த பாக்கியகுமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதேபோல், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் சரகம், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 2008 ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. இது தொடர்பாகவும் சுபாஷ்சந்திர கபூர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் 21ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.