தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் காவல் சரகம், திருவையத்துகுடி ஊராட்சி வளர்த்தாமங்கலம் கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த புண்ணியமூர்த்தி மனைவி கலைச்செல்வி(45). கணவர் இறந்துவிட்ட நிலையில், மகன் கெளதமன்(29), மகள் ரமணா(25) ஆகியோருடன் கலைச்செல்வி வசித்து வருகிறார்.
இவர்களில் கெளதமன் எம்.பி.ஏ. படித்துவிட்டு கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் வங்கியில் வாகன கடன் பிரிவில் தாற்காலிகமாக வேலை செய்து வருகிறார். ரமணா பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
கலைச்செல்வி வடக்குமாங்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும், தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் கடந்த 2012 முதல் முகவராகவும் பணியாற்றி வந்தாராம். இந்நிலையில், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த பலரிடம் காப்பீடு செய்வதற்கான பிரீமியத் தொகையை பெற்று, கலைச்செல்வி நிறுவனத்தில் செலுத்தி வந்தாராம். காப்பீட்டு காலத்தின் முடிவில் அதற்கான முழு தொகையையும் பெற்று தருவதாக வாடிக்கையாளர்களிடம் அவர் உறுதி அளித்திருந்தாராம். ஆனால், அந்த காப்பீட்டு நிறுவனம் தற்போது செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கலைச்செல்வியிடம் காப்பீடு தொகை அளித்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரும்படி நெருக்குதல் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த கலைச்செல்வி, அவரது மகன் கௌதமன், மகள் ரமணா ஆகிய மூவரும் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை செவ்வாய்க்கிழமை குடித்தனர். அக்கம்பக்கத்திநர் அவர்களை மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பாபநாசம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.