பட்டுக்கோட்டை அருகே நகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் வியாழக்கிழமை அதிகாலை 16 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை உக்கடை வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் மகாத்மா காந்தி சாலையில் வசிப்பவர் சம்பத் (47). பட்டுக்கோட்டை எல்ஐசி கிளையில் அலுவலராக உள்ளார். இவர் மனைவி அருணா (42). பட்டுக்கோட்டை நகராட்சி ஜெயாலயம் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அருணா வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு, கொல்லைப்புறத்தை சுத்தம் செய்ய சென்றபோது, அங்கு சுவர் ஓரமாக உடலை போர்வையால்
போர்த்தியபடி மறைவாக நின்றிருந்த 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் அருணா அணிந்திருந்த 16 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். இந்த சம்பவம் தொடர்பாக துப்பு துலக்குவதற்காக தஞ்சையிலிருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து ஓடி அதே பகுதியிலுள்ள கோயில் வாசலில் படுத்துக் கொண்டது. தடயவியல் நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து அருணா அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் சம்பவயிடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.