சிலை திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரை (57) சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் சரகம் சித்தமல்லி வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சிலைகள் திருட்டுப்போயின. இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் இறந்துவிட்டனர். பிச்சுமணி என்பவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
இதையடுத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூரைபோலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அக். 26-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் பிணையில் வெளியே உள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிச்சாமி, சஞ்சீவிஅசோகன், சிவக்குமார், கலியபெருமாள், ரெத்தினம், கந்தசாமி, அருணாசலம், ஸ்ரீராம், பார்த்திபன், புழல் சிறையில் உள்ள சென்னை பாக்கியகுமார் ஆகிய 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அதேபோல, அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் சரகம் ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு 8 சிலைகள் திருட்டுப்போயின. இதுதொடர்பாகவும் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 7 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கையும் வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.