கரந்தையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஜானா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கரந்தை முதன்மைச் சாலையில் காலை 8 மணியிலிருந்து பகல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அலுவலர்கள், போக்குவரத்து நெரிசலால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன்கருதி கரந்தை பகுதியை ஒருவழிப் பாதையாக அறிவிக்க வேண்டும். சுஜானா நகரில் மழைநீர், கழிவுநீர் செல்வதற்கு உரிய கழிவுநீர் பாதைகள் அமைத்து, கழிவுநீரால் ஏற்படும் நோயில் இருந்து நகரில் வசிக்கும் மக்களைக் காக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் வெ. உதயபாஸ்கரன் தலைமை வகித்தார்.
செயலர் தரும. கருணாநிதி, துணைத் தலைவர்கள் ஆர். சதாசிவம், மா. சிவக்குமார், ஜி. சுப்பிரமணியன், பி. செல்வம், எஸ்.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.