தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தாற்காலிக புறக்காவல் நிலையம் புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை வரும் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கும்பகோணம் கடைவீதியில் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக கும்பகோணம் சாரங்கபாணி தேரடி அருகே தாற்காலிக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி தாற்காலிக புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். ஆய்வாளர் மகாதேவன், உதவி ஆய்வாளர் சுதா மற்றும் போலீஸார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி. கணேசமூர்த்தி கூறியது: தீபாவளி வரை 24 மணிநேரமும் இந்த தாற்காலிக புறக்காவல் நிலையம் செயல்படும். இங்கு எப்போதும் போலீஸார் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும் போலீஸார், ஊர்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் என 600 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி 274 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.
மேலும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.