தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி ஆர்.வி.எஸ். வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் 10 பேர் ஊரக வேளாண்மை அனுபவப் பயிற்சிக்காக பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தங்கியிருந்து அப்பகுதியில் நடைபெறும் பல்வேறு வேளாண்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வியாழக்கிழமை பரக்கலக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விவசாயி செல்வம் என்பவரின் நேரடி நெல்விதைப்பு வயலில் இறங்கி பெண் விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்து பயிர்க் களைதல் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு அங்கு வந்திருந்த விவசாயிகளிடம் விளக்கம் கேட்டு தெரிந்துகொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். ஈஸ்வர், வேளாண்மை அலுவலர்கள் எஸ். மாலதி, சங்கீதா, உதவி வேளாண்மை அலுவலர் ரீகன் ஆகியோர் செய்திருந்தனர்.