அரசு போக்குவரத்து கழக பொறையாறு பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்ததில், உயிரிழந்த தொழிலாளர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு தஞ்சாவூரில் அனைத்து சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை அதிகாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பொறையாறு பணிமனை ஓய்வறை இடிந்து விழுந்ததில், பலியான 8 தொழிலாளர்களின் மரணத்துக்கு நீதி கேட்டும், முதல் தகவல் அறிக்கை வெளியிடவும், பழைமை வாய்ந்த கட்டடத்தை ஆய்வு செய்யாத தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை காலை 4 மணிமுதல் 6 மணி வரை தஞ்சாவூர் புறநகர் கிளை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியூ தலைவர் பி. முருகன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் உள்ள நகரக் கிளை முன் ஏஐடியூசி பொதுச் செயலர் துரை. மதிவாணன் தலைமையில் தொமுச நிர்வாகிகள் உ. அன்பரசு, ஆர். ஜெயச்சந்திரன், ஜெயவேல்முருகன், அறிவன் அம்பேத்கர் சங்க பொதுச்செயலர் இளங்கோவன், டிஎம்எம்கே பொதுச் செயலர் எம். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் 2 கிளைகளின் முன்பும் உயிரிழந்தவர்களுக்காக ஐந்து நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.