பாபநாசம் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் கைது
பாபநாசம் அருகே அண்மையில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவையாறு வட்டம், கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் முருகானந்தம் (32). இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் திருவையாறு கடைவீதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் சென்றாராம். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம். இதுகுறித்து திருவையாறு போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் முருகானந்தம் கடந்த வியாழக்கிழமை திருவையாறிலிருந்து சுவாமிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கண்டகரையம் கிராம பிரதான சாலையில் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனம் ஒன்றை பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டிருந்தனராம். சந்தேகத்தின் பேரில் அருகே சென்று பார்த்தபோது அது அவருடைய இரு சக்கர வாகனம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து முருகானந்தம் கபிஸ்தலம் போலீஸாருக்கு தெரிவித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் இருசக்கர வாகனத்தை பிரித்துக் கொண்டிருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கல்யாணபுரம் தேவன் நகரை சேர்ந்த சதீஸ்குமார் (31), ஆடுதுறை கலைஞர் நகர் கலியமூர்த்தி மகன் மணிகண்டன்(24) என்பதும், இவர்கள் முருகானந்தத்தின் இருசக்கர வாகனத்தை திருடி வந்து பகுதி பகுதியாக பிரித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.