தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணிக்கு நேரடி நியமன எழுத்துத் தேர்வை 4,953 பேர் எழுதினர்.
தஞ்சாவூர் அக்ஸியம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்தது:
மாவட்டத்தில் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பணிக்கான நேரடி நியமன எழுத்து தேர்வுக்கு 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் எழுத 6,278 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் 4,953 பேர் தேர்வு எழுதினர். 1,325 பேர் வரவில்லை.
தேர்வைக் கண்காணிப்பதற்காக 588 பேர் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 58 மாற்றுத்திறனாளிகள் தேர்வர்களும், 5 கண்பார்வையற்ற தேர்வர்களும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்குத் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற தேர்வர்களுக்குக் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர்.
ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுலவர் எம்.கே. சி. சுபாஷினி, மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ், வட்டாட்சியர் ஆர். தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.