காஷ்மீர சிறுமி ஆஷிபா வன்புணர்ச்சி படுகொலைக்கு நீதி கேட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் மேடை, பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஷ்மீரத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த சிறுமி ஆஷிபா இந்துத்துவ வெறியர்களால் கோயிலில் மறைத்து வைத்து, கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டு அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், இந்துத்துவ வெறியர்களைக் கண்டித்தும் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், மெளன அஞ்சலி நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், மாநகரச் செயலர் என். குருசாமி, ஒன்றியச் செயலர் எம். மாலதி, சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் என்.வி. கண்ணன், செயலர் சாமி. நடராஜன், சிறுபான்மை நலக் குழு மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கே. அபிமன்னன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் கே. அருளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்தசாமி, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலர் மில்லர் பிரபு, சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெ. பாத்திமாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர்
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீர சிறுமி ஆசிபா வன்புணர்ச்சி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் எல்ஐசி முகவர்கள் சங்கம், ஊழியர் சங்கம், அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுமி ஆசிபாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி 10 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். எல்ஐசி ஊழியர் சங்கக் கோட்டப் பொதுச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஊழியர் சங்கக் கோட்டத் தலைவர் புண்ணியமூர்த்தி, முகவர் சங்கப் பொதுச் செயலர் ராஜா, அலுவலர்கள் சங்கக் கோட்டச் செயலர் பெலிக்ஸ்அமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.