பாபநாசம் அருகே திருக்கருகாவூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கவியரசன்(26). அதே தெருவில் வசித்து வரும் சேகர், தர்மராஜ், கண்ணதாசன், வினோத்குமார், மாதவன் உள்ளிட்ட ஐந்து பேரும் முன்விரோதம் காரணமாக கவியரசனை அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, சேகரை அதே தெருவில் வசித்து வரும் கலையரசன், கவியரசன் இருவரும் சேர்ந்து ஆயுதங்களால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயமடைந்த சேகர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து, தர்மராஜ்(28), கண்ணதாசன்(30), வினோத்குமார்(24), மாதவன்(23), கலையரசன்(22) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.