கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஏடிஎம் வாயிலில் கேட்பாரற்று கிடந்த 49,500 ரூபாயை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் ஒருவர் திங்கள்கிழமை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
சுவாமிமலை கீழவடம்போக்கித் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் திருவாரூர் மண்டல அலுவலகத்தில் பட்டியல் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். துரைராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமிமலை சன்னதி தெருவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் வாயிலில் 500 ரூபாய் பணக்கட்டு ஒன்று கிடந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாததால், திங்கள்கிழமை காலை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற துரைராஜ், வங்கி மேலாளரிடம் அந்த பணத்தை அளித்தார். போலீஸாரிடம் பணத்தை ஒப்படைக்குமாறு மேலாளர் தெரிவித்ததன்பேரில், சுவாமிமலை காவல் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சி.செல்வராஜிடம் 49,500 ரூபாயை துரைராஜ் ஒப்படைத்தார்.
வங்கி ஏடிஎம் வாசலில் கேட்பாரற்று கிடந்த ரூ. 49,500 காவல் துறையிடம் ஒப்படைத்த துரைராஜை பொதுமக்களும், காவல்துறையினரும் பாராட்டினர்.