இந்து சமய அறநிலையத் துறைக் கூடுதல் ஆணையர் கவிதாவை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறி, இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஜூலை 31-ம் தேதி சென்னையில் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள கவிதாவிடம் மேலும் விசாரணை நடத்துவதற்காக, அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதிக்கக் கோரி கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். ஆனால், உடல் நலக்குறைவால் கவிதா திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதால், இந்த மனு மீதான விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.