பட்டுக்கோட்டை~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதை பணிகளை, தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மைப் பொறியாளர் காளிமுத்து ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இவர்கள், பட்டுக்கோட்டை-அதிராம்பட்டினம் வழித்தடத்தில் உள்ள பாலங்கள், தண்டவாளம் அமைப்பு, அதிரை, முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மைப் பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.