பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வெள்ளிக்கிழமை அமைதி பேரணி நடத்தப்பட்டது.
இதையொட்டி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் தியாக. சுரேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.குமார், தளவாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் தியாக ரமேஷ், நகர செயலாளர்கள் சரவணன், சீனு, முன்னாள் நகர செயலாளர் வீரமணி உள்ளிட்ட திமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. அம்மாபேட்டை சின்னக்கடைத் தெருவில் தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக அம்மாபேட்டை பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கபட்டிருந்த மு. கருணாநிதி உருவ பதாகைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.