அதிராம்பட்டினம் காந்தி நகரைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் (35). இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அருகிலுள்ள குடிசை வீட்டில் மாரியப்பனின் தாய் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மாரியப்பன் வீடும், அவரது தாயார் வீடும் எரிந்தது. இதில் வீட்டிலிருந்த துணிகள், பணம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, பள்ளிச் சான்றிதழ் ஆகியவை எரிந்து சாம்பலாகின.
தகவலறிந்த பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகர், பாதிக்கப்பட்ட 2 குடும்பத்தினருக்கும் சனிக்கிழமை நேரில் ஆறுதல் கூறி, தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். இதேபோல, அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்லம் (திமுக) தனது சார்பில் நிவாரண உதவியாக தலா ரூ.2,500 வழங்கினார்.
பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஜி. சாந்தகுமார், பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கும் அரசு நிவாரண உதவியாக தலா ரூ. 5 ஆயிரம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். அதிரை ரோட்டரி சங்கம் சார்பில் மண்ணெண்ணெய் ஸ்டவ், சமையல் பாத்திரங்கள், 1 மாதத்திற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.