தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு வீடு புகுந்து 3 பெண்களைத் தாக்கி, அவர்கள் அணிந்திருந்த 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பூக்கொல்லை சாலையில் உள்ள வெங்கடேசுவரா நகரைச் சேர்ந்த ரவீந்திரநாத்தின் மனைவி தாமரைச்செல்வி (58). ஓய்வு பெற்ற ஆசிரியை.
இவர் தன் வீட்டில் தனது மருமகள் நிம்மி (28), பக்கத்து வீட்டைச் சேர்ந்த அம்சவள்ளி (56) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இவரது வீட்டுக்குள் கால் சட்டை மட்டும் அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத 3 பேர் நுழைந்தனர்.
மேலும், மூவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, தாமரைச்செல்வி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, நிம்மி அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், பலத்தக் காயமடைந்த தாமரைச்செல்வி, நிம்மி, அம்சவள்ளி ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார் விசாரிக்கின்றனர்.