கும்பகோணம் அருகே சைக்கிள் மீது நாகை மாவட்டக் காவல் வாகனம் மோதியதில் முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள திருமங்கலக்குடி குறிச்சிமலையைச் சேர்ந்தவர் எம். ஜவஹர்அலி (65). இவர் குறிச்சிமலை புதுத்தெருவில் வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாகத் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த நாகை மாவட்டக் காவல் பாதுகாப்பு வாகனம் இவர் மீது மோதியது.
இதில், பலத்தக் காயமடைந்த ஜவஹர்அலி கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரித்தனர்.