கும்பகோணத்தில் கஜா புயல் நிவாரணத்துக்காக நாட்டுப்புற கலைஞர்கள் வெள்ளிக்கிழமை இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டினர்.
கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதையடுத்து நிவாரண நிதியை பல்வேறு அமைப்புகளும் திரட்டி வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்ட தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றம் சார்பில் கும்பகோணத்தில் வீதியோர இசை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் நிவாரண நிதி திரட்டினர்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சி நாகேசுவரன்கோயில் வடக்கு வீதி, காந்தி பூங்கா, பெரிய தெரு வழியாக ராமசுவாமி கோயிலை அடைந்தனர்.
இதில், கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டிமேளம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்தபடி 50 க்கும் அதிகமான நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் ரூ. 22,500 திரட்டினர்.
இதில், இசைக்கலைஞர்கள் பெருமன்றத்தின் ஒன்றியக் குழுத் தலைவர் ஜி. குருதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.