கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கஜா புயல் பாதிப்பு விவரங்கள்- நிவாரணப் பணிகள் குறித்து கணினியில் தகவல்கள் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் பிற மாவட்ட அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட குடிசைகள், வீடுகள், தென்னை மற்றும் வாழை மரங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்கள் கணக்கெடுப்பிற்கு பிறகு அந்த தகவல்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி இரவு பகலாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளின் மேம்பாடு குறித்து வியாழக்கிழமை ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார். இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆட்சியரின் ஆய்வின்போது, துணை ஆட்சியர் (பயிற்சி) ஸ்ரீதேவி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.