தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2014 மின்சாரச் சட்டத்திருத்த வரைவைத் திரும்பப் பெற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வாரியமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 1.12.2015 முதல் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையைப் பெற வேண்டும். புதிய வேலைப்பளு உடன்பாட்டை கால தாமதப்படுத்தாமல் முழுமையாக அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சம்மேளனத்தின் வட்டக் கிளைத் தலைவர் எஸ். சார்லஸ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பொன். தங்கவேல், இணைச் செயலர் என். சின்னதுரை, கோட்டச் செயலர் ஜி. செல்வநாயகம், ஏஐடியுசி மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் க. அன்பழகன், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி பொதுச் செயலர் துரை. மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.