குழந்தைகளுக்காக பாரதியார் எழுதிய கவிதைகள் சாகா வரம் பெற்றவை என்றார் பட்டுக்கோட்டை தமிழ்ச்சங்கச் செயலர் ந.மணிமுத்து.
பட்டுக்கோட்டை பூமல்லியார்குளம் பாரதி சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்த நாள் விழாவில் மேலும் அவர் பேசியது:
திருஞானசம்பந்தரால் சீர்காழி புகழ் பெற்றதைப் போல் மகாகவி பாரதியாரால் புகழ் பெற்று விளங்குகிறது எட்டயபுரம்.
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா-என்ற இக்கவிதையை பெண்களுக்கென்று ஐந்தாம் வேதமாக அருளியவர் பாரதியார். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்-இப்படியாகப் பெண் தர்மத்தைப் புதிதாகச் சொன்னவர் பாரதியார் என்றார் மணிமுத்து.
முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட அப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 400 நோட்டுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.கே.குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை எஸ்.எம். ஜெயந்தி வரவேற்றார். உதவி ஆசிரியை ரெ. நீலேஸ்வரி நன்றி கூறினார்.