63 ஆண்டுகளுக்கு முன் உள்ள கணக்கின்படி பந்தநல்லூர் கோயிலில் ஐம்பொன் சிலைகள் ஆய்வு

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் 1955-ஆம் ஆண்டு கணக்கின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் 1955-ஆம் ஆண்டு கணக்கின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை நள்ளிரவு வரை ஆய்வு மேற்கொண்டனர்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பந்தநல்லூரை சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள கோயில்களிலிருந்து பழமையான, ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் ஆகியவை பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  கடந்த 2013 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையினர் கணக்கெடுப்பில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை, சந்திரசேகரஅம்மன்  சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமானது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் கஜேந்திரன், கோயில் செயல் அலுவலர் காமராஜ், முன்னாள் செயல் அலுவலர் ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் கி. ராஜா ஆகிய நால்வரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்,  பந்தநல்லூர் கோயிலில் உள்ள சிலைகள் குறித்து கடந்த மாதம் நடத்திய ஆய்வில் சில கோயில்களின் திருவாச்சி, வெள்ளிப் பொருட்கள் மாயமானது தெரியவந்தது.
இந்நிலையில், கோயில் எழுத்தர் ராஜாவிடம் பெற்றத் தகவல்களைக் கொண்டு, திங்கள்கிழமை நள்ளிரவு வரை ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், பந்தநல்லூர் கோயிலில் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, 1955 ஆம் ஆண்டு கணக்கின்படி பந்தநல்லூர் கோயிலில் எத்தனை சிலைகள் இருந்தது, இங்கிருந்து கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு எந்த ஆண்டு,  எத்தனை சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன என கோயில் பணியாளர்களிடம் ஐ.ஜி. விசாரித்தார். அதற்கு பணியாளர்கள் சிலைகள் தொடர்பான  கணக்குகள் கோயிலில் உள்ளது; கும்பகோணம் உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ளது எனவும் மாறி மாறி தகவல்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களால்  போலீஸார் அதிருப்தி அடைந்தனர். பின்னர், செவ்வாய்க்கிழமை சிவராத்திரி தினத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் பின்னொரு நாளில் இந்த ஆய்வை தொடர்வது என போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com