கும்பகோணத்தில் 17 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் மங்கல இசை நிகழ்ச்சியோடு செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.
பிரபஞ்ச இயக்கத்தை காண்பித்த நாட்டியக்கலையின் நாயகனான ஆடல்வல்லான் எனப் போற்றப்படும் தில்லையம்பல நடராஜனுக்கு காணிக்கையாக சிதம்பரத்தில் ஆண்டு தோறும் நாட்டியாஞ்சலி விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல, கும்பகோணத்திலும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.
நாட்டியாஞ்சலி விழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவுக்கு வந்தவர்களை நாட்டியாஞ்சலி செயலாளர் கே.என். ராஜகோபாலன் வரவேற்றார். தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஆடிட்டர் டி.எஸ். வெங்கடசுப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நாட்டியாஞ்சலி விழாவில் முதலாவதாக சென்னை பரதநாட்டிய அகாதெமி மாணவிகளின் நாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து பெங்களூரு ருக்மணி விஜயகுமார் பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து நள்ளிரவு வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.