தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என்றார் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி. தினகரன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்குரைஞர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் போல, கல்வித்துறை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. இதனால் பணிகள் தரமில்லாமல் இருக்கின்றன. எங்கும் ஊழல் நிறைந்த இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.
ஆர்கே நகர் தொகுதியில் மக்கள் இரட்டை இலை சின்னத்தை தோற்கடித்து குக்கர் சின்னத்தை வெற்றிபெற செய்தார்கள். இதற்குக் காரணம் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கவில்லை என அவர்கள் நினைத்ததுதான்.
அதிமுகவில் உள்ள அனைவரையும் நீக்கி வருகின்றனர். இது தொடர்ந்தால் கடைசியில் ஒருங்கிணைப்பாளர், இணை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே அதிமுகவில் இருப்பார்கள். எம்எல்ஏக்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைத்தால், வருங்காலத்தில் அவர்கள் தோற்கடிக்கடிப்படுவார்கள். இதை அறிந்த எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி மக்களுக்காக போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார் என்றார் டிடிவி. தினகரன்.