பட்டுக்கோட்டையில் 33 வார்டுகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி, குறைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டு ஆய்வு செய்யும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
கட்சித் தலைமை அறிவிப்பின்படி, ஒரத்தநாடு எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த வார்டு நிர்வாகிகளும் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தொகுதி தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக மிகவும் வலுவாக உள்ளது. கட்சிக்கு மக்கள் ஆதரவும் அதிகரித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு வரும் தேர்தலில் தொகுதி பங்கீடு செய்யும்போது திமுக தலைமை பட்டுக்கோட்டை தொகுதியை தோழமை கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
ஒரு சிலர் கட்சியில் நடைமுறையில் உள்ள சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை களைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தஞ்சை வழக்குரைஞர் கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் அ. அப்துல்சமது, மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, வார்டு நிர்வாகிகள், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.