தஞ்சாவூர் மாவட்டத்தில் ராபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய வியாழக்கிழமை (பிப்.15) கடைசி நாள் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் நிகழ் ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள கோடை நெல், உளுந்து, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய பிப். 15ஆம் தேதி கடைசி நாள்.
மாவட்டத்தில் ராபி பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள கோடை நெல்லுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகையான ரூ. 26,800-க்கு 1.5 சதவீத பிரிமிய தொகையாக ஏக்கருக்கு ரூ. 402 மட்டும் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
உளுந்து மற்றும் நிலக்கடலை பயிருக்கு பிரிமிய தொகையாக ஏக்கருக்கு ரூ. 195, எள் பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ. 164 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களது பயிரைத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ வியாழக்கிழமைக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.