காதலர் தினத்தை கண்டித்து குடந்தையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

காதலர் தினத்தையொட்டி தாராசுரம் கோயிலுக்கு வந்திருந்த காதலர்களிடம் இந்து மக்கள் கட்சியினர் தாலிகொடுக்கும் நூதன போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

காதலர் தினத்தையொட்டி தாராசுரம் கோயிலுக்கு வந்திருந்த காதலர்களிடம் இந்து மக்கள் கட்சியினர் தாலிகொடுக்கும் நூதன போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் புதன்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினம் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்றும், இதை தடை செய்ய வேண்டுமென்றும் கூறி இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்தனர்.  
இதன்படி, இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலா தலைமையில் திருமணத்திற்கு தேவையான தாலி, தேங்காய், கல்யாண மாலை, சீர்வரிசை பொருட்கள், முகூர்த்தகால் ஆகியவற்றுடன் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு வந்தனர். அங்குள்ள மரங்களுக்கு அடியில் கூடி பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம், தாங்கள் கொண்டு வந்திருந்த கல்யாணசீர் பொருட்களுடன் சென்று தாலி கயிறை கொடுத்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தினர். இதைக் கேட்ட காதலர்கள் கோயிலின் நான்குபுறமும் சிதறி ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் தாலுகா போலீஸார் விரைந்து வந்து,  இந்து மக்கள் கட்சியினரை தடுத்ததுடன், அவர்களை திருமண சீர்வரிசை பொருள்களுடன் வெளியேறுமாறு கூறினர். மேலும், இது போன்ற போராட்டங்களை தொடர்ந்தால் கைது செய்வோம் என்றும் கூறினர்.
இதை ஏற்காத இந்து மக்கள் கட்சியினர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com