பந்தநல்லூர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஆய்வுக்காக கும்பகோணம் சிலைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து 107 சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் பந்தநல்லூரை சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள கோயில்களிலிருந்து பழமையான, ஐம்பொன் சிலைகள், வெண்கல சிலைகள் ஆகியவை பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் கணக்கெடுப்பில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வானை, சந்திரசேகரஅம்மன் சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமானது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் கஜேந்திரன், கோயில் செயல் அலுவலர் காமராஜ், முன்னாள் செயல் அலுவலர் ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் கி. ராஜா ஆகிய நால்வரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், பந்தநல்லூர் கோயிலில் உள்ள சிலைகள் குறித்து கடந்த மாதம் நடத்திய ஆய்வில் சில கோயில்களின் திருவாச்சி, வெள்ளிப் பொருள்கள் மாயமானது தெரியவந்தது.
மேலும், சில கிராமங்களில் உள்ள கோயில் நிர்வாகிகள் எங்களது சிலைகள் பந்தநல்லூர் கோயிலில் பாதுகாப்புக்காக வைத்திருந்தோம் அவை பாதுகாப்பாக உள்ளதா, சிலைகள் எங்குள்ளது என ஐ.ஜி.யிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல், கடந்த இரு நாள்களாக பந்தநல்லூர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் பல சிலைகள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, புதன்கிழமை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திலிருந்து ஆரலூர், செருகுடி, நெய்வாசல், மரத்துறை ஆகிய நான்கு கிராமங்களில் உள்ள 7 கோயிலுக்குரிய 107 சிலைகள் மூன்று மினி லாரிகளில் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சிலைகளை நாகேஸ்வரன் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், சாரங்கபாணி கோயில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, சிலைகள் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு செயல் அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வியாழக்கிழமை (பிப். 15) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், 4 கிராம கோயில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்களை, அர்ச்சகர்களை வரவழைத்து, நீங்கள் வழங்கிய சிலை இதுதானா, இல்லை இதில் ஏதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த உள்ளனர்.
விசாரணையின்போதுதான் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து தெரிய வரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.