மருத்துவர்கள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் செவிலியர் வெள்ளக்கோவில் மணிமாலா மரணத்திற்கு நீதிகேட்டு, பேராவூரணியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர் மணிமாலா மரணத்திற்கு காரணமான மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை கைது செய்து, காவல்துறை மற்றும் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். வட்டாட்சியர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். மணிமாலா குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். செவிலியர்களுக்கென தனி இயக்ககம் வேண்டும். நோய் குறிப்பு அறிவுறுத்தல் அறிக்கை தவிர, வேறு எந்த வகையிலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இல்லாமல், செவிலியர் கண்காணிப்பாளர் பொறுப்பில் செவிலியர் பணிசெய்ய வேண்டும். செவிலியர்களுக்கு பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனை அனைத்து பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் மற்றும் தொழில் நுட்பநர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் பணியில் இருந்தனர்.