கும்பகோணத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டாவது மாடிக்கு கும்பகோணம் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனர்.
கும்பகோணத்தை அடுத்த உள்ளூர் ஊராட்சி ராஜீவ் நகரை சேர்ந்தவர் சேதுராமன் மகன் கண்ணன் (எ) பாபு (50). எலக்ட்ரானிக் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் உள்ளூர் திட்ட குழுமத்தில் அனுமதி பெறாமல், இரண்டாவது மாடி கட்டியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் திட்ட குழும அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கும்பகோணம் உள்ளூர் திட்ட குழும இணை இயக்குநர் வசந்தி, மேற்பார்வையாளர் மலர்கொடி, வரைவாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலை கண்ணன் வீட்டின் இரண்டாவது மாடியை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இணை இயக்குநர் வசந்தி கூறுகையில், கண்ணன் அனுமதியின்றி இரண்டாவது மாடி கட்டி அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து, அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளக்கம் கேட்டும், சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதற்குரிய பதிலையோ, விளக்கத்தையோ தராததால் இரண்டாவது தளத்திற்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.