தஞ்சாவூரில் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அருட்சகோதரி மரியம்மாள் தலைமை வகித்தார். இந்த விழாவை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில், மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பானை வைத்து பொங்கல் தயாரித்தனர். இதற்காக ஏர் கலப்பை, மாட்டு வண்டி, பசு, கன்று, ஆடு, கோழி, கயிற்றுக் கட்டில் போன்றவற்றுடன் குடிசை, வயல் வரப்பு போன்றவற்றை மாணவிகள் அமைத்தனர். மேலும், பரதம், வில்லுப்பாட்டு, தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், முளைப்பாரி எடுத்தல் போன்றவற்றுடன் கும்மி கொட்டி, மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
திருவாரூர் ஒலிமதி மங்கள மாதா ஆசிரம அதிபர் அருட்தந்தை ஜோசப் மரியான், கல்லூரி இல்லத் தலைமைச் சகோதரி பூரண அல்போன்சா ஆசியுரையாற்றினர். கல்லூரி முன்னாள் மாணவி சங்கத் தலைவர் உஷா நந்தினி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர்.
இதேபோல, வெண்ணாற்றங்கரை ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்தனர். மேலும், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
காங்கிரஸ் சார்பில்... தஞ்சாவூர் விஜயமண்டபத் தெருவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் 32-வது வார்டு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவுக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குடுவா ஆதிநாராயணன் தலைமை வகித்தார். இதில், அப்பகுதி மக்களுக்கு பொங்கல் பைகள் வழங்கப்பட்டன.
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், கோட்டத் தலைவர் பீஷ்மா ரவி, கோவி.மோகன், பூக்கடை குணசேகரன், வி.ஆர். குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.