தஞ்சாவூர் மாவட்டத்தில் பழங்குடியினரின் சாதி சான்றுகளின் மெய்த்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுதொடர்பாக ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது: அரசாணையின்படி அரசால் தோற்றுவிக்கப்பட்ட கண்காணிப்பு விசாரணை பிரிவுகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் சரி பார்த்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நிலுவையிலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றுகளின் மெய்த்தன்மையைச் சரி பார்க்கும் பணியைக் கூடுதல் பணியாக மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர் வேறொரு நகரம் அல்லது மாநகரத்துக்கு இடம் பெயர்ந்துள்ள நேர்வில் அவர் முன்பிருந்த அல்லது முன்னர் வசித்த இடத்துக்கு சென்று விசாரணை செய்ய வேண்டும். விண்ணப்பதாரரால் கோரப்பட்ட சமுதாய நிலை குறித்த அனைத்து தகவல்களையும் நேர்விற்கேற்ப, கண்காணிப்புப் பிரிவு விசாரணை அலுவலர் வெளிப்படையான முறையில் ஆய்வு செய்து சேகரிக்க வேண்டும்.
அவர்களது சாதி, இனம் தொடர்பாக, வெளிப்படையான முறையில் சரிபார்த்து விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது காப்பாளர்களையும் விசாரிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் சமுதாய நிலை குறித்து அறிந்துள்ள ஏனைய நபர்களையும் விசாரித்து, விண்ணப்பப் படிவத்தில் கோரப்பட்டுள்ளவாறு அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் களஆய்வின்போது தனியருக்குத் தனது இனம் குறித்து நிரூபிக்கும் சாட்சியங்களை அளிக்க போதுமான வாய்ப்பினை தனியருக்கு வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரவீன்குமார், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் கோவிந்தராசு, மாநகராட்சி ஆணையர் மு. வரதராஜ், முதன்மைர் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாசினி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ். சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.