பட்டுக்கோட்டை ஒன்றியம், முதல்சேரி கிராமத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் (உளுந்து) பயிர் திட்டம் சார்ந்த செயல்விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 30 விவசாயிகள் பங்கேற்றனர்.
முகாமுக்கு பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் தலைமை வகித்துப் பேசுகையில், தொடர்ந்து நெல் சாகுபடி செய்து வருவதால் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால், நெற்பயிர் அறுவடை செய்தபின் விவசாயிகள் மாற்றுப் பயிராக உளுந்து
சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.
உளுந்து விதை நேர்த்தி செய்தல், உளுந்து ரகங்கள் ஆகியன குறித்து பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பாரதியும், உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் ச.மாலதியும், நீர் மேலாண்மை குறித்து வேளாண்மை அலுவலர் சா.சங்கீதாவும் விளக்கினர். ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் அ.சித்ரா செய்திருந்தார்.