கும்பகோணம் அருகே உள்ள துகிலி அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் மார்கழி மகா உற்சவ நாமசங்கீர்த்தன வீதி பஜனை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை தனுர் மாத சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 29 நாள்களாக நாள்தோறும் வீதிகளில் பஜனை வழிபாடு நடைபெற்றது.
அப்போது, விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சுவாமி, சத்குரு, ராமர், கிருஷ்ணர், பாண்டுரங்கன், ஆஞ்சநேயர் பாடல்கள் பக்கவாத்தியங்களுடன் பாடப்பட்டன.
காலை 6 முதல் 7.30 மணி வரை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைத்து வயதினரும் மார்கழி மாத குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் நாள் புலவர் பால மகாலிங்கம் நாமாவளிகளை பாடி தொடங்கி வைத்தார். நிறைவு நாளில் புலவர் நடராஜன் முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் மார்கழி மாத சிறப்புரையாற்றினார். நாள்தோறும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆதிசங்கரர் நற்பணி மன்றத்தினர், தாம்பிராஸ் கிளை நிர்வாகிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.