பொங்கல் பொருள்கள் வாங்க கடைகளில் அலைமோதிய கூட்டம்

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் சனிக்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மாலையில் பொங்கலுக்குத் தேவையான

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் சனிக்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. மாலையில் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்க அதிகளவிலான பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் பொங்கல் திருநாளாகும். வயலில் அறுவடை செய்த புதுநெல்லிலிருந்து கிடைக்கப்பெற்ற அரிசி, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, புதுப்பானையில் இட்டு புதிய அடுப்பில் வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கும், இறைவனுக்கும் படைத்து, இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழாவே பொங்கல் திருவிழா எனப்படுகிறது.
இந்த விழாவின் போது, தமிழர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, புத்தாடை அணிந்து, செங்கரும்புடன் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர். பொங்கலுக்கு முதல் நாளான சனிக்கிழமையன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகி என்ற சொலவடைக்கேற்ப தமிழ் மக்கள், தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருள்களை கழித்துக் கட்டி, புதிய பொருள்களை வாங்கி சேர்த்தனர். சிலர் பழைய பொருள்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடினர். பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சனிக்கிழமை தஞ்சாவூரில் உள்ள காமராஜர் சந்தை, கீழவாசல் சந்தை, பூக்கடைத்தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சனிக்கிழமை அதிகமானோர் பொங்கலுக்குத் தேவையான பொருள்களை வாங்கியதால், காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
ரயில், பேருந்துகளில் நெரிசல்: வெளியூர்களிலிருந்து தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களும், இதர பணியாளர்களும் விடுமுறைக்காக சொந்த ஊர் நோக்கிச் செல்வதற்காக, தஞ்சாவூர் ரயில் நிலையம் மற்றும் பழைய, புதிய பேருந்து நிலையங்களில் ஏராளமானோர் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com