கும்பகோணத்தைச் சேர்ந்த மருத்துவர் கொடைக்கானலில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அவரது தாயார் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
கும்பகோணம் சத்திரம் கரூப்பூரைச் சேர்ந்தவர் தியாகராஜனின் மகன் குருமூர்த்தி (27). இவரது மனைவி மலர்கொடி. இருவருக்கும் 8 மாதங்களுக்கு முன், திருமணமானது. இருவரும் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் குருமூர்த்தி, மனைவி மலர்கொடி மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் கொடைக்கானலுக்கு கடந்த 14-ஆம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு தூங்கச் சென்ற குருமூர்த்தி, மறுநாள் (ஜன.15) காலையில் எழுந்திருக்கவில்லை. அவரை எழுப்ப முயன்றபோது அவர் இறந்துகிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். குருமூர்த்தி எப்படி இறந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் குருமூர்த்தியின் தாயார் ருக்மணி செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.