தஞ்சாவூர் - திருப்பதி இடையே விரைவு ரயிலை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. தஞ்சாவூர் - நாகை இடையேயான இரு வழிச் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இப்பணிகளை மீண்டும் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும். தஞ்சாவூர் - திருப்பதி இடையே விரைவு ரயிலை இயக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே லஞ்சம் தவிர்த்து, வாழ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். நேர்மையான அலுவலர்களை அடையாளம் கண்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. அன்பரசன் தலைமை வகித்தார். இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. மணிவேல், தஞ்சை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எஸ். ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர். இயக்கச் செயலர் ஆதி. நெடுஞ்செழியன், அமைப்பாளர் மு. செல்வராஜ், இணைச் செயலர் நா. செந்தில் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.