ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வியாபாரிகளிடம் நன்கொடை கேட்டு துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்பதை வரவேற்பதுடன், 51 மைக்ரானுக்கு அதிகமான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் சட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை உடனடியாகக் கைவிட வேண்டும். தஞ்சாவூர் மாநகரைப் பொலிவுறு நகரமாக வருவதை வரவேற்பதுடன், வியாபாரிகளுக்கு பாதகம் இல்லாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகளை இரவு 12 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி தர வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் ரயில் விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் எம். கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. முருகேசன், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.