தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கோரி 361 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ. 17,720 மதிப்பிலான நடைபயிற்சி சாதனம், மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் ஆகிய உபகரணங்களும், மாவட்ட வருவாய் அலகில் பணியிடைக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 15 பேருக்குக் கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணையையும், இருவருக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராலசம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.